இந்திய பாதுகாப்புத் துறையில், நான்கு ஆண்டு காலத்திற்கு இளைஞர்கள் பணியாற்றும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் கீழ், பணியமரத்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டு காலத்திற்குப் பிறகு, ராணுவப் பதவியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், அகில இந்திய அளவில் 25% அக்னிவீரர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் வன்முறைக்களமாகவும் மாறியுள்ளது. தமிழ்நாட்டிலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன். அவர்களுக்குத் துணைநிற்கிறேன். அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

இத்தோடு, ‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.