சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை மாநகராட்சில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை உள்ளிட்ட பிரிவுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

குறிப்பாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணியையும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது 718 பூங்காக்கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. கூடுதலாக ரூ.100 கோடியில் 150 பூங்கா மற்றும் 50 விளையாட்டுத் திடல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 18 விளையாட்டு திடல்களை மேம்படும் பணி ரூ.12.57 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. இதன்படி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.