தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 6,999எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,930 பிடிஎஸ் இடங்கள், தனியார்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன்புவெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,949 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,913 பேரும் பட்டியலில் இடம்பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து, 28, 29-ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்டுள்ள 436 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 97 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதால், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பொதுப் பிரிவுகலந்தாய்வு முதல் முறையாகஆன்லைனில் நடைபெறுகிறது.கலந்தாய்வு தொடர்பானஅனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்படும்என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.