ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர அளவில் மறியல் போராட்டத்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை தமிழக காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

எதிர்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் இக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

பாஜகவின் பழிவாங்கும் போக்கு: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் சம்மன் அனுப்பி, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்குவதற்கு பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. ஆனால், இதைக் கண்டு அஞ்சாமல் அமலாக்கத்துறையின் அடக்குமுறையை அரசியல் பேராண்மையோடு எதிர்கொண்டதை இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது.

எதிர்கட்சித் தலைவர்கள் மீது மத்திய அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு தொடுத்துள்ள அடக்குமுறையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இந்திய ஜனநாயகம் சந்தித்து வருகிற சோதனையான காலகட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையான போராட்டங்களின் மூலம் எதிர்கொண்டு பாசிச பாஜக ஆட்சியை அகற்றும் வரை ஓய மாட்டோம் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இந்திய விடுதலைப் போராட்டம் 75: இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை நடப்பாண்டு முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், வேலூர் புரட்சி தினம் ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் 75 கி.மீ. தூர பாத யாத்திரையை 5 நாட்கள் தொடர்ந்து நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் மிகச் சிறப்பான முறையில் 75-வது சுதந்திர தின விழாவை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்திட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மாபெரும் மறியல் போராட்டம்: மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தவறான பொருளாதார கொள்கை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி, தோல்வியடைந்த பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், கரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலை வாய்ப்பு இழப்பு என பல்வேறு நிலைகளில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சமீபகாலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இதையெல்லாம் பாஜக ஆட்சியினருக்கு நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர அளவில் மறியல் போராட்டத்தை நடத்திட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக ஆளுநருக்கு கண்டனம்: தமிழக ஆளுநரான ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அமைச்சரவையின் அறிவுரைககளை புறக்கணிக்கிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பாஜகவின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார். வரலாற்று உண்மைகளை திரித்து கூறுகிற வகையில் அவரது உரைகள் அமைந்து வருகின்றன. இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.