சென்னை: தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று (ஜன. 27) சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்க்கும் நிகழ்வு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் மாணவர்கள் தங்களது மடிக்கணினி மூலமாக பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்தனர்.

இதனிடையே, “தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அதன் விவரம்: மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிட உள்ளோம்: கே.பாலகிருஷ்ணன்

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிபிசியின் ஆவண படத்தை சமூக வலைதளங்கள், பொது இடங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.