சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் தொடங்கியது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘வீரபாண்டியபுரம்’, ‘குற்றம் குற்றமே’ படங்களுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டியில் உள்ள சிவன் கோவிலில் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ்நாடு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி படபிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இன்று தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு திண்டுக்கலைச் சுற்றி ஒரு மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் படபிடிப்பில் விஜய் ஆண்டனி, ‘ஜதி ரத்னலு’ தெலுங்கு திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) ஆகியோர் பங்கேற்றார்கள். தொடர்ந்து சத்யராஜ், பாரதிராஜா மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.