தமிழக பட்ஜெட் வரும் ஆக.13-ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, புதிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, முந்தைய அதிமுக அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. தேர்தலில் வெற்றி பெற்று தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த 2021-22ம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இந்தாண்டு, பரிட்சார்த்தமாக காகிதமில்லாத வகையில் இ-பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதுதவிர, இந்தாண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடள் முதல்வர் மு.க.ஸ்டாலின், துறைவாரியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தற்போது பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ஆக.13-ல்நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 13-ம் தேதி தாக்கல் செய்தபின் இரு தினங்கள் சனி, ஞாயிறு (சுதந்திர தினம்) விடுமுறைக்குப்பின் திங்கள்கிழமை ஆக.16 முதல் 4 அல்லது 5 நாட்கள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர, தமிழக அரசு ஏற்கெனவே தற்போதைய நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், அறிவிக்கப்பட்ட முந்தைய காலங்களில் ஏற்பட்ட நிதி பின்னடைவுகள், பல திட்டங்களுக்கான தேவைப்படும் நிதி, அவற்றை திரட்ட எடுத்துக் கொள்ளப்படும் காலம், எதனால் தாமதம், குறித்த விவரங்களை தெரிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள், துறைகள் வாரியாக புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கும் வெள்ளை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக விண்ணப்பித்து உள்ள நிலையில், அவற்றுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.