தமிழகத்தில் கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்களை ஒழுங்குபடுத்த தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டு மக்கள் தொகையில், சுமார் 50 சதவீத மக்கள் நகர்ப்புரத்தில் வசிக்கின்றனர். இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இதன் காரணமாக நகர்புறங்களில் திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள், கழிவுநீர் மற்றும் இதர கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற வகையில் வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.

எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்கள் அல்லது பிற வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது கடந்த 2022ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுத்ததல் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய 2022ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

  • மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000 ஆகும்.
  • உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இச்சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும்.
  • உரிய உரிமம் பெற்றவர்கள், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.
  • உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, புவியிடம் காட்டும் அமைப்பு (GPS) பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதுடன், அக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதிசெய்ய இவ்விதிமுறைகள் வழி செய்கிறது.
  • உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியினை ஒரு முறை பயன்படுத்துவதற்கு 6000 லிட்டர் வரைக்கும் 200 ரூபாயும் 6000 லிட்டருக்கு மேற்பட்ட இனங்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • கழிவுகளை அகற்றும் செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதைத் தடை செய்ய வழிமுறைகள் உள்ளதுடன், உரிமதாரர்கள் தவறு செய்தால் புகார்களை பதிவு செய்வதற்கான வழிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சட்டம் மற்றும் உரிமத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றத்திற்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
  • தொடர் குற்றங்களைச் செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன், குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
  • மலக்கசடுகள், கழிவுநீர், இதன் தொடர்புடைய இதர கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் ஏற்ப விரிவான செய்முறை வழிகாட்டு நெறிமுறைகள் (Operative Guidelines) உருவாக்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக நடைமுறைப்படுத்த துணை விதிகளை (bye-laws) உருவாக்கிட மாதிரி துணை விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.