Site icon Metro People

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி உடல் இன்று தகனம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைதலைமை தளபதி பிபின் ராவத்உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

நேற்று காலையில் நாடாளு மன்றம் கூடியதும் முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, உறுப் பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 8-ம் தேதி தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங் கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர் என்பதை மிகுந்த வருத்தத்தோடும் கனத்த இதயத்தோடும் அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளனர். வெலிங்டனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக 12.08 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பற்கு முன்னர் சூலூர் தளத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் தீ எரிவதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அருகே சென்று பார்த்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகி தீப் பிடித்து எரிவது தெரிந்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானி வருண் சிங் செயற்கை சுவாச உதவியுடன், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகிறார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உடல் டெல்லிகொண்டுவரப்பட்டு முழு ராணுவம்மற்றும் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.

– பிடிஐ

Exit mobile version