டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து மத்திய அரசு கடிதம் அனுப்பிய நிலையில் டிசம்பர் 11-ம் தேதி தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

எனினும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ளாததால் மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாரானது.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போராட்டக்குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். அவரிடம் தங்கள் மீதம் உள்ள கோரிக்கைகளை விவசாயிகள் தெளிவாக விளக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்திருந்தனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க மத்திய அரசு தயார் என அறிவித்தது. இதனை ஏற்று மத்திய அரசின் கடிதம் விவசாய சங்கங்கள் அமைத்துள்ள குழுவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளைத் திரும்பப் பெறவும் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒப்புக்கொண்டன.

இதனையடுத்து விவசாயிகள் டிசம்பர் 11 ஆம் தேதி சனிக்கிழமையன்று தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் தங்கள் கூடாரங்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் சங்கங்கள் இன்று மாலை 5:30 வெற்றி பிரார்த்தனை நடத்தவுள்ளனர். மேலும் டிசம்பர் 11 ஆம் தேதி காலை 9 மணியளவில் டெல்லியின் எல்லையில் உள்ள சிங்கு மற்றும் திக்ரி போராட்டப்பகுதிகளில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் டிசம்பர் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தவுள்ளது.

எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜனவரியில் கூடி பேசுவோம் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.