மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. மின் மானியத்தை பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அக்.6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்.6-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களின் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்கள் காலிசெய்த பிறகு மீண்டும் வீட்டிற்கு வாடைக்கு வருபவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம்களைநடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி ஆதார்க்கு பதில் பயன்படுத்தப்படும் வேறு ஆவணங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் மானியமானது வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மானியம் பெற ஆதார் கட்டாயமாக்கப்படுவதாக இருந்தால் அதனை மாநில தொகுப்பு நிதியில் இருந்துதான் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது வீட்டின் உரிமையாளர் ஆதார் எண்ணை மட்டும் இணைக்க முடியும் என்பதனால், அரசு மானியம் வாடகை தாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சார்பில் வடக்கை தாரர் மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளர் – வாடகை தாரர்களுக்கு இடையேயான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களை பெற்ற பிறகு தான் ஆதார் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் பதில் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு அடிப்படை முகாந்திரம் இல்லாதது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.