தேவர் ஜெயந்தியின்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்: “அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக நானும் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.

தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் 2014-ல் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் அக்டோபர் 30-ல் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கி கணக்கின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கக் கோரி வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகம் தங்க கவசத்தை என்னிடம் ஒப்படைக்க மறுத்ததுடன், அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, தேவர் ஜெயந்தி நாளில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த நிலையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மனுதாரரான திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர்தான் அதிமுகவின் அனைத்து வங்கி கணக்குகளின் வரவு, செலவுகளை கவனிக்கிறார். அவரிடம்தான் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான சுப்புரத்தினம் வாதிடுகையில், ”“அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தங்க கவசத்தை மனுதாரரிடம் வழங்கக்கூடாது. எங்கள் தரப்பையும் வழக்கில் சேர்க்க வேண்டும்” என்றார்.

மேலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள், வங்கி நிர்வாகம் சார்பில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதங்களை கேட்ட நீதி விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.