அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்று பெரும் சரிவை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.

இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்திஙல் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சற்று ஏற்றம் கண்டது. பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. 900 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து பயமுறுத்தியது. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் அச்சம் நிலவியது.

இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 9:20 மணி நிலவரப்படி, 30-பங்குகளின் பிஎஸ்இ சென்செக்ஸ் 402 புள்ளிகள் அல்லது 0.67 சதவீதம் உயர்ந்து 60,004 ஆக அதிகரித்தது.

என்எஸ்இ நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.63 சதவீதம் உயர்ந்து 17,857 ஆகவும் இருந்தது. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.42 சதவீதம் உயர்ந்து. ஸ்மால் கேப் பங்குகள் 0.69 சதவீதம் உயர்ந்தது. எனினும் பின்னர் சற்ற சரிந்து சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு சற்று குறைவாக வர்த்தகமாகி வருகிறது.