உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப் பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017 மார்ச்சிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின்படி, பணப் பலன்களை வழங்கவில்லை எனக் கூறி ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணப் பலன் வழங்காதது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் நேரில் ஆஜரானார். அப்போது அரசுத் தரப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மனுதாரரை மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.