பிட்காயின் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியாவிலும் இந்த ஏற்றம் காணப்படுகிறது. பல நாடுகளில் ஏராளமான முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்ட்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் பல நாடுகளில் இன்னும் இயற்றப்படவில்லை. இந்தநிலையில் கஜகஸ்தானில் நடந்து வரும் போராட்டங்கள் பிட்காயின் நெட்வொர்க்கில் கடந்த சில தினங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இணையம் முடக்கியதால் பெரிய பிட்காயின் சுரங்க வலையமைப்பு செயலற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிட்காயின் நெட்வொர்க்கின் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக உலக அளவில் வியாழன் அன்று கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு பெருமளவு சரிந்தது. பிட்காயினின் விலை வியாழனன்று இரவு 9 மணிக்குப் பிறகு 41,222.41 டாலராக ஆக சரிவடைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதிக்கு பிறகு இந்த அளவுக்கு பிட்காயின் விலை இந்த அளவு சரிந்துள்ளது.

பிட்காயின் வெள்ளிக்கிழமை ஐந்து சதவிகிதம் வரை குறைந்துள்ளது. பிட்காயின் கடைசியாக 40,938டாலர் என்ற மிக குறைந்த மதிப்பையொட்டி இது சரிந்துள்ளது. செப்டம்பர் 29-ம் தேதி 41,704 ஆக இருந்தது. அதன் பிறகு இந்த அளவுக்கு தற்போது சரிந்துள்ளது. நவம்பரில் 69,000 டாலர் என்ற சாதனையை எட்டியதிலிருந்து தற்போது 40 சதவீதத்திற்கும் மேலாக சரிவு கண்டுள்ளது.

கஜகஸ்தான் போராட்டம் மட்டுமல்லாமல் அமெரிக்க நாணயக் கொள்கை கடுமையாக இருக்கும் என்ற கவலைகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் கிரிப்டோ பிளாட்ஃபார்ம் ஸ்டாக் ஃபண்ட்ஸின் சிஓஓ, மேத்யூ டிப் கூறுகையில் இதுபற்றி கூறுகைகில் ‘‘பணவீக்கக் கவலைகள் ஊக வணிகர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனைத்து சந்தைகளிலும் பரவலான ஆபத்து உணர்வை நாங்கள் காண்கிறோம். எனினும் அடுத்த சில நாட்களில் சூழல் மாற வாய்ப்புண்டு’’ எனக் கூறினார்.