புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தாங்கள் போகும் பாதையில் ஒளிவெள்ளமாகத் தெரிகிறது எனவும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் வருகிற 9-ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு  நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்துறையில் புதிதாக பெறப்பட்டிருக்கும் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும், ரூ 15,610.43 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 8,776 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும், 8 புதிய திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் மின்னணு வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் டெக்னாலஜி, ஆக்ஸிஜன் தொழிற்சாலை உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் பரவலான முறையில் அமையக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது. மின்னணுக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் நிறைய முதலீடுகள் வந்துள்ளது. மேலும் பல முதலீடுகள் தென் தமிழகத்திற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி பரந்தூர் விமான நிலையத்தையொட்டி ஏற்கனவே பல தொழிற்பூங்காக்கள் உள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான முன் ஏல சந்திப்பில், அந்த பகுதி மக்களின் கருத்துகள் தொடர்பாக தொழில்நுட்பம் சார்ந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன; 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவைக்கு முடிவு செய்துள்ளது.

இதுதவிர உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டின் இருப்பை பதிவு செய்வது முக்கியமானது என்றும், தமிழ்நாட்டுடன், மற்ற மாநிலங்களும் வருகிறார்கள். இதனால் நாங்கள் போகும் பாதையில் ஒளிவெள்ளமாகத் தெரிகிறது என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.