Site icon Metro People

வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் 2023-24 நிதியாண்டில் பல்வேறு வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை வணிகர்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வணிகங்களுக்கு மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன்கீழ் பல பிரிவுகளில் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் உரிமங்கள், ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும். அந்த வகையில், 2023-24 நிதியாண்டுக்கு புதுப்பிக்கப்பட வேண்டிய தொழில் உரிமங்களை மண்டல அலுவலகங்களில் ஆய்வாளர்கள் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வணிகர்களின் நலன் கருதி தொழில்நுட்ப உதவியுடன் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், க்யூஆர் குறியீடு மூலமாகவும் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக் கொள்ளும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமங்களை வணிகர்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிதாக தொழில் வணிகம் தொடங்குவோர், அதுகுறித்து விண்ணப்பித்து உரிமங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறினால், ஏப்.1-ம் தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் என கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

Exit mobile version