கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளையே (இன்று) பதிவேற்ற வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில், மாவட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அறங்காவலர் பதவிக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அந்த விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறவில்லை என்று மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் புகார் தெரிவித்தார். ஆனால், ஆன்லைன் தளத்தில் விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பழைய விண்ணப்ப படிவங்களை நீக்கவும், அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணியை நாளையே (இன்று) முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.