வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். தமிழில் ‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘பிறந்தாள் பராசக்தி’, ‘கலர்ஸ்’, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள படம் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் என பிஸியாக நடிகையாக வலம் வருகிறார் வரலட்சுமி.

தற்போது தமிழில் தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சூரியகிரண் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘அரசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார்.

ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜு, சித்தார்த் ராய், சந்தான பாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், ஹரி உள்ளிட்ட பலர் வரலட்சுமியுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்.செல்வா, இசையமைப்பாளராக விபின் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.