சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் பேசியதாவது:

வேளாண் நிதிநிலை அறிக்கையில் எருமை, பன்றி வளர்ப்பு குறித்ததிட்டங்கள் இடம்பெற வேண்டும். நிலமற்ற கூலி விவசாயிகளுக்கான திட்டங்கள் வேண்டும். அரசு பணியில் பதவி உயர்வுகளும் இனசுழற்சி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். மத்திய அரசுடன் பேசி அவர்களை ஆதிதிராவிடர் வகுப்புக்கு மாற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் குறைதீர்ப்பு என்பது மக்களைத் தேடிநிர்வாகம் என்ற வகையில் அமையவேண்டும். அம்பேத்கர் சிலைகளில் உள்ள இரும்பு கூண்டுகளை அகற்ற வேண்டும். எனதுகாட்டுமன்னார் கோயில் தொகுதியில் உள்ள வீராணம் ஏரி பல ஆண்டுகளக தூர்வாரப்படாமல் உள்ளது. அதை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘வீராணம் ஏரி கடந்த திமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டு, அந்த மண்ணைக் கொண்டு கரை உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஏரியும் தூர்வாரப்படவில்லை. விரைவில் வீராணம் ஏரி தூர்வாரப்படும்’’ என்றார்.