கேரளாவில் கரோனா தொற்றுக்கு மத்தியில் நிபா வைரஸ் பரவி வருவதால் குமரி-கேரள எல்லை பகுதியான களிய்காவிளை, நெட்டா சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையினரும், போலீஸாரும் தொடர் கண்காணி்பபில் ஈடுபட்டு்ள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அண்டைய மாநிலமான கேரளாவில் கரேகானா பாதிப்பு அதிகமாக உள்ள வேளையில் குமரி எல்லையான களியக்காவிளையில் ஏற்கனவே வாகன சோதனை நடத்தி கேரளாவில் இருந்து வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் நெகட்டீவ் சான்றிதழ், அல்லது இரு தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வழங்குவோர் மட்டுமே குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதற்கிடையே கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் 12 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும், 30க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தமிழகத்தில் உள்ள கேரள எல்லை பகுதிகள் அனைத்திலும் சுகாதாரத்தறையினர், போலீஸார் இணைந்து நிபா அறிகுறி உடையோரை கண்டறிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறப்பு மருத்துவ மருத்துவ குழுவும் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் களியக்காவிளை, நெட்டா, காக்காவிளை சோதனை சாவடியில் கடந்த இரு நாட்களாக கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, அதில் இருக்கும் பயணிகளை பரிசோதித்த பின்னரே குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

இதனால் பயணம் செய்வோர் அவர்கள் சென்றடையும் இடத்திற்கு போய்சேர தாமதமானாலும் பயணிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதே நேரம் குமரி மகாவட்டத்தில் இந்த 3 சோதனை சாவடிகளை தவிர கேரள எல்லையில் உள்ள 15க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகளிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.