‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலிருந்து புகழ் விலகியுள்ளார். அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலமாகியுள்ளனர். தற்போது அதன் போட்டியாளர்களை வைத்து ‘காமெடி ராஜா கலக்கள் ராணி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவாக இருந்ததால், மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது இதிலிருந்து புகழ் விலகியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சியில் இதில் புகழ் கலந்து கொள்ள மாட்டார், அவர் திரையுலகில் பிஸியாகிவிட்டார் என்று தெரிவித்தார்கள். அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே கை தட்டி பாராட்டு தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து புகழ் பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் அவர் பேசியிருப்பதாவது:

“அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கண்டிப்பாக அனைவரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் எனக்கு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளன. ஆகையால் என்னால் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக ‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்”

இவ்வாறு புகழ் பேசியிருந்தார்.