ஆதார் அட்டைக்கு பயோ மெட்ரிக் பதிவுகளாக கைரேகை, கண்ணின் கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும். ஆனால், மக்கள் ஐடியில் அப்படி இல்லை

இந்திய அளவில் வழங்கப்படும் ஆதார் அட்டையைப் போல தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. அப்படியென்றால் ஆதாருக்கு மக்கள் ஐடிக்கு என்ன வேறுபாடு என்ற கேள்வி நம் மனதில் எழுவது இயல்புதான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.

ஆதாரில் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், மக்கள் ஐடியில்

அடையாள அட்டை வழங்கப்படாது. அடையாள எண் மட்டுமே உருவாக்கப்படும். அரசு திட்டங்கள், வங்கிப் பயன்பாடுகள் போன்றவற்றுக்கு அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்தலாம். மக்கள் ஐடி என்பது இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆதார் அட்டைக்கு பயோமெட்ரிக் பதிவுகளாக கைரேகை, கண்ணின் கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும், புகைப்படம் தேவைப்படும். ஆனால், மக்கள் ஐடியில் கைரேகை, கண்ணின் கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படாது. அதேவேளையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் பயனாளிகளை கண்டறிந்து அதுதொடர்பான தரவுகள் மக்கள் ஐடியில் சேர்க்கப்படும். ஆதார் அட்டை என்பது சில சேவைகளுடன் இணைக்கப்படும். ஆனால், தரவுகளை இரு துறைகளுக்கு இடையே ஒப்பிட்டு பார்ப்பதற்காக மட்டுமே மக்கள் ஐடி பயன்படுத்தப்படும்.

இரு வேறு பெயர்களில் ஒரே எண்களுடன் கூடிய ஆதார் எண்கள் கொண்ட தரவுத் தளங்களும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் அடையாள அட்டை இல்லாமல் சரியான நபரை அடையாளம் காண்பது கடினம். மக்கள் ஐடியில் தரவுத் தொகுப்புகள் முழுமையாக பொருந்தக்கூடிய வகையில் ஒரு தரவை ஏற்படுத்தும் முதன்மையான பதிவு  உருவாக்கப்படும். ஆதார் எண் சேவையை தனிநபர் கணினி மூலம் லாக் – இன் செய்து பெற முடியும். மக்கள் ஐடி சேவையை கணினி மூலம் லாக் -இன் செய்து பெற முடியாது.