சென்னை: இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்து செல்லும் வகையில் டி.என்.சி.ஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் திறன்களை கண்டறியவும், பந்து வீச்சாளர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெற உள்ளது அடுத்த மாதம் 11ம் தேதி துவங்கி மார்ச் மாதம் வரை இந்த தேர்வை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யபடும் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு அணிக்கு அழைத்து வரும் அளவிற்கு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு திட்டம் குறித்த அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசுகையில், “தமிழகத்தில் நிறைய வீரர்கள் இருந்தும் இந்திய அணிக்கு செல்லவில்லை என தொடர்ச்சியாக வரும் விமர்சனங்களை பார்த்து வருகிறோம். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களை எடுத்து பார்த்தால் அவர்கள் ரஞ்சி கோப்பை போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இருப்பார்கள். மும்பை வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என தொடர்ந்து அரசியல் நோக்கில் பார்க்க கூடாது. மும்பை அணி 45 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. நாமும் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு நிறைய வீர்ரார்கள் செல்ல வாய்ப்புள்ளது.

TNPL மூலம் ஜெகதீசன், சாய் சுதர்சன் போன்ற பல வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கண்டறிந்துள்ளது. இருப்பினும் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல ரஞ்சி கோப்பை வெல்ல வேண்டியது கட்டாயம். அப்படி வெல்ல வேண்டும் என்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தமிழ்நாடு அணிக்கு முக்கியமாக தேவைப்படுகின்றனர். லட்சுமிபதி பாலாஜி தான் தமிழகத்தை சேர்ந்த கடைசி வேகப்பந்து வீச்சாளர். தற்போதைய சூழலில் சிவப்பு பந்தில் விளையாடும் அளவிற்கு நம் வீரர்களுக்கு அவ்வளவு திறன் இல்லை என்பது தான் உண்மை. இதனை கலைய பட்டி தொட்டியில் இருந்து எல்லாமே வீரர்கள் வர வேண்டும்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சரியான நேரத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது பாராட்டுக்குறியது. மாவட்ட அளவில் வீரர்கள் வரும் போது இன்னும் திறமையோடு வீரர்கள் உருவாவார்கள். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கூட நேரடியாக இந்தியா விளையாடவில்லை. TNPL உட்பட பல லீக் போட்டிகளின் ஆடி பலர் உதவியின் மூலம் தான் இந்தியா ஆடினார். பெண்கள் கிரிக்கெட்டிற்கு நல்ல முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழகம் பெண்கள் கிரிக்கெட் நல்ல நிலையில் உள்ளது.

ஜூனியர் கிரிக்கெட் தான் கிரிக்கெட்டின் டிஎன்ஏ. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை வென்றால் தமிழ்நாடு அணி நல்ல நிலையில் இருக்கும். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மூன்று டைட்டில் ஜெயிக்க வேண்டும். கடவுள் மனது வைத்தால் அடுத்த ஆண்டு ரஞ்சி கோப்பையை கூட வெல்லலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.