2019-ல் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பிறகு முபினை கண்காணிக்குமாறு தமிழக உளவுத் துறை மற்றும் கோவை காவல் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்காணிப்பை நிறுத்தியது ஏன்? அரசியல் அழுத்தங்களால் அவர் கண்காணிப்பு வளையத்திலிருந்து விலக்கப்பட்டாரா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கோவையில் திட்டமிட்டிருந்த தற்கொலைப்படை தாக்குதல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அல்ல, வெடிபொருள் எடுத்து சென்ற வாகனம் இறைவான் அருளால் விபத்திற்கு உள்ளானதால் பொதுமக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் முழுமுதல் காரணம்.

அக்.18, 2022 அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, பிஎஃப்ஐ என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த பின் பல இடங்களில் தாக்குதல் நடத்தச் சொல்லி அந்த அமைப்பின் தலைவர்கள் தொண்டர்களிடம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் (செந்தில்பாலாஜி) இதைப் பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.

இப்படி ஓர் எச்சரிக்கை வந்த பின்பும் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது ஏன்?

2019-ல் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பிறகு முபினை கண்காணிக்குமாறு தமிழக உளவுத் துறை மற்றும் கோவை காவல் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்காணிப்பை நிறுத்தியது ஏன்? அரசியல் அழுத்தங்களால் அவர் கண்காணிப்பு வளையத்திலிருந்து விலக்கப்பட்டாரா?

பெரும் உயிர் சேதம் அரசின் மெத்தனப் போக்கால் நிகழ்ந்திருக்கும். தமிழக முதல்வர் பதில் அளிப்பாரா? அல்லது வழக்கம் போல் மவுனமாக இருந்து மக்களை திசைதிருப்ப திட்டமிட்டு கொண்டிருக்கிறாரா? என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “காவல் துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார்.

எனவே, அவருக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்ஐஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்வர் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், பாஜகவினர் கூறியதனால்தான் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என அவர்கள் கூறி வருகின்றனர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.