தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் என தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வத்தல்மலை மலைக் கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், வத்தல் மலைமலை கிராமத்துக்கு பேருந்து வசதி உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்டங் உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: வத்தல்மலை மலைக் கிராம பழங்குடி மக்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன். ‘கலைஞர் வருமுன் காக்கும் திட்டம்’ என்ற திட்டம் சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியின்போதே செயல்பாட்டில் இருந்த திட்டம் தான் இது. மீண்டும் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த திட்டத்துக்கு புத்தாக்கம் தரப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் நடப்பது என் ஆட்சி அல்ல. நம் ஆட்சி, நம் எல்லோருக்குமான ஆட்சி இது. மருத்துவத்தை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளான ஏழை, எளியவர்களை தேடி வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் சூழலை இந்த ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை என்றாலும் ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை, வெற்றி பெற்றபின்னர் முழுமையாக நிறைவேற்றுகிறார்களா என தெரியாது. ஆனால், திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

மரவள்ளி உழவர்கள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை சந்தித்து கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளோம். கண்டிப்பாக செய்து தருவோம்.

மக்களின் தேவையை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தரும் அரசுதான் திமுக அரசு. மகளிர் சுய உதவிக் குழுவை முன்னாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில்தான் முதன் முதலில் தொடங்கி வைத்தார்.

அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சுழல்நிதி, வங்கிக் கடன், மானியம் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி மகளிர் சுய சார்புடன் வாழ வழி செய்யப்பட்டது. இடையில் 10 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பழைய கம்பீரத்துடன் விரைவில் மீண்டெழும் வகையில் தமிழக அரசு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது. இவ்வாறு பேசினார்.

பின்னர், தோட்டக்கலை துறை சார்பில், வள்ளல் அதியமான் கோட்டம் வடிவில் காய்கறிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்டஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி, பென்னாகரம் எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை மதுரையில் முதல்வர்

மதுரை அருகே உள்ள பாப்பாபட்டி ஊராட்சியில் நாளை (அக்.2)நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டி கிராமத்துக்கு செல்லும் முதல்வர் காலை 10.30 முதல் 11.30 மணி வரையில் நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் கே.நாட்டார்பட்டியில் உள்ள வேளாண் கூட்டுறவுச் சங்கத்தைப் பார்வையிடுகிறார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை வரும் முதல்வர், மேலமாசி வீதியில் மகாத்மா காந்தி மேலாடைதுறந்த இடத்தைப் பார்வையிட்டு கதர் விற்பனையைத் தொடங்கிவைக்கிறார்.

பின்னர் காந்தி அருங்காட்சியகத்துக்கு வரும் முதல்வர் அங்கு அருங்காட்சியகத்தைப் புனரமைக்க அரசு ஒதுக்கியுள்ள ரூ.6 கோடியில் எத்தகைய பணிகளை மேற்கொள்ளலாம் என அருங்காட்சியக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் ரேஸ்கோர்ஸ் அருகே நூலகம் அமைக்க தேர்வாகியுள்ள இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 3 மணியளவில் விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.