Site icon Metro People

பறவை காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட எடத்துவா, பள்ளிப்பாடு, தாளவாடி, தழக்காகர ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன.

ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வளர்க்கப்பட்டன. சமீபத்தில் இந்த பறவைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதுபற்றி அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு நடந்த ஆய்வில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச்.5, என்.8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில்  பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதால், மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. 

Exit mobile version