வன்முறையாக மாறிய வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டம்: மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 10 போலீஸார் காயம் அடைந்தனர். ரயில் மீது கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்.8 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வக்பு சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் இதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஏப்.11) முர்ஷிதாபாத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. நிம்திதா ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலை நோக்கி கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதில் 7 முதல் 10 போலீஸார் வரை காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஐந்து ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன. எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அவர் ஆலோசானை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *