Site icon Metro People

ஜெய்பூர் விரைவு ரயிலில் பாதுகாப்புபடை வீரர் துப்பாக்கி சூடு – சக அதிகாரி உட்பட 4 பேர் பலி!

ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், பால்கர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர் மற்றும் பயணிகள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஓடும் ரயிலில் பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து அந்த வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த  டஹிசர் ரயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது அதில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர், போலீசார் தப்பியோடிய பாதுகாப்பு படைவீரரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த  துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version