Site icon Metro People

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு – இன்று விசாரணை!

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி இன பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது.

கடந்த மே மாதம் 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததோடு மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது

இவ்விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி மத்திய அரசு கோரியிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணமாக அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வெளிப்படையான  விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிட கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version