Site icon Metro People

தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்களில் கோவையில் 1.5 டன் தங்க நகைகள் விற்பனை.

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் கூறினர்.

இதுதொடர்பாக, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்தாலும் மக்கள் பலர் தங்க நகைகள் வாங்குவதற்கு என தனியாக சிறிது நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு முந்தைய மூன்று நாட்கள் தங்க நகைகள் விற்பனை சிறப்பாக இருந்தது.

கோவையில் அக்டோபர் 21 முதல் 23-ம் தேதி வரை மூன்று நாட்களில் மட்டும் தோராயமாக 1.5 டன் எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.750 கோடியாகும். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மாப்பிள்ளை மோதிரம், பெண்களுக்கான மோதிரங்கள், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தகைய நகைகளை அதிக மக்கள் வாங்கியதால் விற்பனை மிகச் சிறப்பாக இருந்தது.

நகை விற்பனையை பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை வியாபாரம் சிறப்பாக இருக்கும்.தற்போது மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கிறது. பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு 5 சதவீத வரியை குறைத்து 10 சதவீதமாக நடைமுறைப்படுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version