அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி: சௌரவ் கோகோய் குற்றச்சாட்டு

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக அஸ்ஸாம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் மட்டும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுதொடர்பாக, துப்ரியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கௌரவ் கோகோய் பேசியதாவது:

“அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜகவுக்கு சுமையாக மாறிவிட்டார். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்களின் பெயர்களை அஸ்ஸாமின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அஸ்ஸாம் தேர்தலை சிதைக்கும் எந்த வெளி ஆட்களையும் அனுமதிக்கக் கூடாது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகின்றது. ஆட்சி அமைத்து அசாம் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள ‘சிறப்புத் திருத்தம்’ என்பது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆர்) இடைப்பட்ட நடைமுறையாகும். வாக்குச் சாவடி நிலைய அலுவலர் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபார்க்கும் பணியை மட்டும் மேற்கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published.