ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்

14-ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை (நவ.28) முதல் சென்னை, மதுரையில் தொடங்குகிறது.

21 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா, அர்ஜென்டினா தலா 2 தடவையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், 14-ஆவது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது. சென்னை,மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை (நவ.28) தொடங்குகிறது.

டிசம்பர் 10-ஆம் தேதி வரை 13 நாட்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் ஹாக்கி கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 16 நாடுகள் பங்கேற்றன. மேலும் 8 அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி, குரூப் ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கனடா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் அணிகளும்,  குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா அணிகளும், குரூப் டி பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா அணிகளும், குரூப் இ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா அணிகளும், குரூப் எப் பிரிவில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் கொரியா, வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

டிசம்பர் 2-ஆம் தேதி வரை 4 நாட்கள் ‘லீக்’ ஆட்டங்கள் நடைபெறும். 3-ஆம் தேதி ஓய்வுநாளாகும். டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்து நாக் அவுட் சுற்று நடைபெறுகிறது.

ரோகித் தலைமையில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையில் சாதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முதல் முறையாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு சொந்த மண்ணில் 2016-ல் 2-ஆவது தடவையாக உலக கோப்பையை வென்று தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் 3-ஆவது தடவையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் உலக கோப்பை போட்டிக்காக சென்னை, மதுரை ஹாக்கி மைதனாங்கள் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் 5,500 பேரும், சென்னையில் 2 ஆயிரம் பேரும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருநபர் 4 டிக்கெட் வரை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.