விருதுநகர்: கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணை இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்குகளை முடித்துவிட்டு நிம்மதியாக வாழ ஆசைப்படுவதாக வரிச்சியூர் செல்வம் அப்போது பேட்டியளித்தார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில்குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், செந்தில்குமார் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ADVERTISEMENT
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், ரவுடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான முதல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன்.
இதுவரை அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன். என்னை சுட்டுப் பிடிக்க போலீஸார் உத்தரவிட்டதாக வெளியான தகவல்கள் வீண் வதந்தி. காவல்துறை இதுபோன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை.
நான் எனது அன்றாடப் பணிகளை செய்து வருகிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. எனக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் கிடையாது. காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வழக்குகளை முடித்து விட்டால் நான் எனது பணிகளை பார்ப்பேன்.” என்று கூறினார்.