Site icon Metro People

இலங்கை பொறியாளரை எரித்து கொன்ற 6 பேருக்கு தூக்கு; 9 பேருக்கு ஆயுள்: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரியந்த குமார தியவதன (49) என்பவர், 11  ஆண்டுக்கு முன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்தார். இவர் குறிப்பிட்ட மதத்தை அவமதித்தாக கூறி, கடந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி மத அடிப்படைவாத கும்பல் ஒருன்று கொடூரமாக தாக்கியது. தொழிற்சாலை கட்டிடத்தின் மாடியில் இருந்து தூக்கி வீசி எறிந்து, வீதியில் வைத்து எரித்துக்கொன்றது.

இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 900  பேருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 9 சிறுவர்கள் உட்பட  89 பேருக்கு   எதிராக கடந்த மார்ச் 12ம் தேதி நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று குற்றம்சாட்டப்பட்ட 88 பேரில் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 9 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

குஜரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நடஷா நஸீம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேருக்கும் தலா 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அலி அஸ்கர் என்பவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 72 பேருக்கு தலா இரண்டு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Exit mobile version