அந்தத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ரேவதி டீச்சர் ஓய்வுபெறும் நாள் மார்ச் இருபத்தெட்டு. இன்னும் முப்பத்தொன்பது நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் கடைசி நாள்களில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் முப்பத்தைந்து ஆண்டு உழைப்புக்கான ஓய்வூதியப் பலன்களைச் சிரமமில்லாமல் பெற முடியும். அக்கறை கொண்ட சக தலைமையாசிரியர்களின் அறிவுரை இது.
அப்படி என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம். பள்ளிக் கூடங்களில் தலைமையாசிரியர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குப் பஞ்சமே இல்லை. சத்துணவு சமைக்கும் ஆயா பூச்சியோடு கத்திரிக்காயை வெட்டிப்போட்டு விட்டாலும்கூடத் தலைமையாசிரியர் தலை தான் உருளும்.