மலருமா மலராதா என ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த அதிமுக – பாஜக கூட்டணி மலர்ந்தே விட்டது. அமித் ஷாவின் அழைப்பை ஏற்று சிரித்த முகத்துடன் வந்து செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா சொன்னதும் இந்த சந்திப்பின் பின்னணியில் நடந்திருப்பதும் வெவ்வேறானது என்று விவரம் அறிந்த வட்டாரத்தினர் சொல்கிறார்கள். இது ஒன்றும் தெரியாத ரகசியமும் இல்லை என்றும் அவர்களே சொல்கிறார்கள்.
முன்னதாக டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த போதே, அண்ணாமலையை மாற்ற வேண்டும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்க வேண்டும், கூட்டணி ஆட்சி என்பதைப் பற்றி எல்லாம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்திருந்தார் இபிஎஸ்.
இதற்கு சம்மதம் என்றால் மட்டுமே அமித் ஷாவை மறுபடியும் சந்திக்க முடியும் என்றும் அழுத்தமாக சொல்லி இருந்தது அதிமுக தரப்பு. நேற்று மதியம் இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஒரு சுற்று ஆலோசனை நடத்திய பிறகே அமித் ஷாவை சந்திக்கப் புறப்பட்டார் இபிஎஸ்.
அதன்படியே, தான் விதித்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு அமித் ஷாவை வழிக்கு வரவைத்து சாதித்திருக்கிறார் இபிஎஸ். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து கிளம்பும் போது இபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது உடனிருந்த எஸ்.பி.வேலுமணி அதை நாசூக்காக தவிர்த்து, “இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி இபிஎஸ்ஸை நகர்த்திச் சென்றுவிட்டார்.
அமித் ஷாவுடனான சந்திப்பு முடிந்ததும் நேற்று இரவு தனது வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த இபிஎஸ், அது சமயம் திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விரைவுபடுத்தி விசாரிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க பாஜக தலைமையை வலியுறுத்துவது என அப்போது முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்.
பாஜக-வை தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரவைத்து விட்டதாக அதிமுக தரப்பில் தம்ஸ் அப் காட்டினாலும் கூட்டணி பேச்சுவார்த்தை விஷயத்தில் பாஜக-வின் கையே ஓங்கி இருப்பதாக விவரம் அறிந்த வட்டாரத்தில் சொல்கிறார்கள். தொகுதிகள் எண்ணிக்கை, கூட்டணி அமைச்சரவை என பாஜக-வும் தன் பங்கிற்கு அதிமுக-வுக்கு ஏகப்பட்ட டிமாண்டுகளை வைத்திருக்கிறது. அதையெல்லாம் இப்போதே வெளிப்படுத்தினால் அதிமுக-வுக்குள் கலகம் பிறக்கலாம் என்பதால், “அதுபற்றி எல்லாம் பிறகு பேசப்படும்” என ஒற்றை வரியில் முடித்துவிட்டார் அமித் ஷா.
ஆனால், இந்த விஷயத்தில் பாஜக-வின் நிபந்தனைகள் என்ன என்பது இபிஎஸ்ஸுக்கு தெரியும். இருந்தாலும் இந்தத் தேர்தல் தனக்கு வாழ்வா சாவா போராட்டம் என்பதாலும் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் வேறு சில விஷயங்களில் பாஜக-வுடன் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டார் இபிஎஸ் என்கிறார்கள். அதேசமயம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுக-வுக்குள் கொண்டு
வருவது குறித்தும் அமித் ஷா தரப்பில் பேசப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பிடிகொடுக்காத இபிஎஸ், “முதலில் கூட்டணியை அறிவிப்போம். மற்றவை குறித்தெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சொன்னதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள். ஆக, பிரிந்தவர்களை மீண்டும் அதிமுக வுக்குள் கொண்டு வருவது பற்றியும் மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கும் இபிஎஸ், செங்கோட்டையனை வைத்து குறுக்குச் சால் ஓட்டும் வேலைகளைச் செய்தால் கூட்டணி மீதான நம்பகத் தன்மை கெட்டுவிடும் என்பதையும் அமித் ஷா தரப்புக்கு புரியவைத்ததாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை ஒதுக்கி வைத்திருப்பதால் அதிமுக மீது தேவரினத்து மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை சரிசெய்யவே அவர்கள் மூவரையும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம் என்று சொல்லி வரும் பாஜக, ஒருவேளை கடைசி வரை இபிஎஸ் அதில் பிடிவாதம் காட்டினால் அதை சமாளிக்க ஏதுவாகவே தேவரினத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி இருப்பதாகவும் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்!