‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் பி.தங்கமணியும் இணை பிரியாமல் இருந்தவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கும் போது கூட தங்கமணி தலையை பார்க்கமுடிவதில்லை.
என்னதான் ஆச்சு தங்கமணிக்கு? பாஜக-வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தாலும், “நமக்கு பாதுகாப்பே பாஜக தான். பாஜக கூட்டணி தான் சரிப்பட்டு வரும்” எனச் சொல்லி வந்தார் தங்கமணி என்பார்கள். பழனிசாமிக்கு ஒருவகையில் சம்பந்தி முறை என்பதால் மற்றவர்களைக் காட்டிலும் கட்சி விவகாரங்கள் தங்கமணிக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். இருந்த போதும், பாஜக கூட்டணி விவகாரத்தில் தங்கமணியின் பேச்சும் பழனிசாமியிடம் எடுபடவில்லை. இதனால், அவராகவே கட்சி நடவடிக்கைகளை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார்.
அந்த நேரம் பார்த்து செங்கோட்டையனை வைத்து பாஜக தனியாக ஒரு டிராக் எடுத்தது. இதைவைத்து, தங்கமணிதான் செங்கோட்டையனுக்கு பின்னால் இருந்து இயக்குகிறார் என அவரது அரசியல் எதிரிகள் சம்பந்திகளுக்கு இடையே சங்கடத்தை உண்டாக்க சமயம் பார்த்து கொளுத்திப் போட்டார்கள்.
இப்படி தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பாஜக கூட்டணியை வலியுறுத்திய நிலையில், வேறு வழியில்லாமல் பழனிசாமியும் தனது முடிவை மாற்றிக் கொண்டு பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை அமித் ஷா வெளியிட்ட அந்த நிகழ்வில் கூட வேலுமணிதான் பழனிசாமிக்கு பக்கத்தில் இருந்தார். ஆனால், இந்தக் கூட்டணிக்கு படி எடுத்துக்கொடுத்த தங்கமணி அங்கேயும் மிஸ்ஸிங்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர், “2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக பழனிசாமியின் மகன் மிதுன் தலைமையில் சர்வே நடக்கிறது. இதைத் தவிர இன்னும் சில முக்கியமான பொறுப்புகளை முடிக்கும் பொறுப்பை மகன் வசம் ஒப்படைத்திருக்கிறார் பழனிசாமி. இதில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தங்கமணி தானாக ஒதுங்கியிருக்கலாம்.
கடந்த பிப்ரவரியில், அம்மா பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக நடத்திய பேரணியில்கூட தங்கமணி கலந்து கொள்ளவில்லை. உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருப்பதாக அப்போது தகவல் சொன்னார்கள். என்ன நிகழ்ச்சி இருந்தாலும் அம்மா பிறந்த நாள் பேரணியை புறக்கணித்திருக்க மாட்டார் தங்கமணி. ஆனால், ஏனோ அவர் கலந்துகொள்ளவில்லை.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக பதிவான வழக்குகளில் 30 வழக்குகள் அதிமுக காலத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதியப்பட்டவை. அந்த நேரத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி.
இந்த நிலையில், இப்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதால் தனது தலைக்கும் கத்தி வருமோ என நினைத்திருக்கலாம் தங்கமணி. அதனாலும் அவர் கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தலைக்காட்டாமல் அமைதிகாக்கலாம். அத்துடன், உடல் நலமும் முன்னைப் போல் இல்லாததாலும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை அவர் தவிர்த்து வருகிறார்” என்றார்.
தங்கமணிக்கு நெருக்கமானவர்களோ, “எடப்பாடி பழனிசாமிக்கும், தங்கமணிக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அண்மையில் கூட இருவரும் ஒன்றாகத்தான் ஃப்ளைட்டில் சென்னைக்குப் புறப்பட்டுப் போனார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க எடப்பாடியார் வீட்டுக்கு தங்கமணி அடிக்கடி செல்வார். கூட்டணி அறிவிப்பின் போது மூத்த நிர்வாகிகள் இருந்தால் போதும் என நினைத்துக்கூட அவர் போகாமல் இருந்திருக்கலாம். மற்றபடி மிதுனின் தலையீடுகள் காரணமாகவெல்லாம் தங்கமணி ஒதுங்கி இருக்கவில்லை. அதுவுமில்லாமல், மாவட்டத்துக்குள் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தவறாமல் கலந்துகொண்டுதான் வருகிறார்” என்கிறார்கள்.
இந்த நிலையில், அண்மையில் நாமக்கல் அருகே நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழகம் முழுவதும் வரவேற்றுள்ளார்கள். 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்” என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் ஏறினார். முன்பெல்லாம் அதிமுக-வில் ஒன்மேன் ஷோ கணக்காக ஜெயலலிதா மட்டுமே பேசப்படும் நபராக இருப்பார். இப்போது சீசனுக்கு ஒருவர் என அத்தனை பேரும் பேசப்படுகிறார்கள்!