கடந்த டிசம்பரில் நடந்த பாமக-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளராக இருந்த தனது பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். இதற்கு, அந்த மேடையிலேயே ஆட்சேபம் தெரிவித்தார் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பார்த்து ஆவேசமான ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கலைன்னா, யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி” என்றார். இதற்கும் மாற்றுக் கருத்துச் சொன்ன அன்புமணி, சென்னையில் தனியாக அலுவலகம் திறந்திருப்பதாகவும் தன்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கு வந்து தன்னைச் சந்திக்கலாம் எனவும் அறிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளார்கள், முகுந்தன் ஆதரவாளர்கள் என ஆளாளுக்கு பிரிந்து தங்கள் தலைவரை முன்னிலைப்படுத்தி பேனர்களை வைத்தனர். முன்னதாக, அன்புமணி பாமக-வுக்கு தலைவரான போது அவரிடம் இருந்த இளைஞர் சங்க தலைவர் பதவியை ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கினார்.
ஆனால், தன்னால் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் போனதால் அடுத்த சில மாதங்களிலேயே பொறுப்பை ராஜினாமா செய்தார் தமிழ்குமரன். இதனையடுத்தே பொதுக்குழுவில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். ஆனால், அவராலும் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையில், ஆதரவாளர்களை மட்டும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தார்.
இந்நிலையில் தான், அன்புமணியை பாமக-வுக்கு செயல் தலைவராக்கி தன்னையே மீண்டும் தலைவராக அறிவித்திருக்கிறார் ராமதாஸ். அய்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து நம்மிடம் பேசிய பாமக தலைமை நிலைய நிர்வாகிகள் சிலர், “அண்மைக் காலமாகவே சின்னவரின் செயல்பாடுகளில் அய்யாவுக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்ட போது அன்புமணி அதில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர், அந்தக் கூட்டத்திற்கே செல்லவில்லை. இதில் அய்யா ரொம்பவே அப்செட். ஏற்கெனவே இளைஞர் சங்க தலைவர் பதவி விவகாரத்தில் பொதுக்குழுவில் அத்தனை பேர் மத்தியில் அன்புமணி விமர்சனம் செய்ததும் அய்யாவை ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. அதனால் தான் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி கூட்டணி பேச்சுவார்த்தை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை அய்யா நினைத்த படிதான் நடக்கும்” என்றனர்.
இதுகுறித்து ராமதாஸிடம் கேட்டதற்கு, “தலைவர் பதவி மாற்றம் ஏன் என்பதை இப்போதைக்குச் சொல்லமுடியாது. பாமக-வை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் பாமக-வுக்கு வருவதாக இருந்தால் வருபவர்களை பொறுத்து அவர்களை இணைக்கலாமா வேண்டாமா என அப்போதைக்கு முடிவெடுக்கப்படும்” என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளைஞர் சங்கப் பதவியை ஏற்கச் சொல்லி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை பாமக தரப்பில் அணுகியதாகச் சொல்லப்பட்டது. அதற்கு, தான் பாமக-வை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டதாக வேல்முருகன் சொன்னதாகவும் ஒரு தகவல். இந்த நிலையில், அண்மையில் பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின் நகலை பாமக-வினர் வேல்முருகனிடமும் வழங்கினர். இது குறித்து ராமதாஸிடம் கேட்டதற்கு, “சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டது” என்றார்.
இளைஞர் சங்கத் தலைவர் பதவிதான் இத்தனைக்கும் காரணமா என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்த போது, “பாமக-வில் இளைஞர்களை சுண்டி இழுத்து வைத்திருந்த காடுவெட்டி ஜெ.குரு மறைந்தார். மற்றொருவரான வேல்முருகன் தனிக்கட்சியை தொடங்கிவிட்டார்.
அவரை மீண்டும் பாமக-வில் இணைத்து இளைஞர் சங்கத்தலைவர் பதவியை தரலாமா என ஒருயோசனை உருவானபோது தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இனியும் இதுபோல இழுபறிகள் இருக்கக் கூடாது என்பதால் தான் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டுவிட்டார் ராமதாஸ்” என்று சொன்னார்கள்.
சென்னைக்கு வரும் அமித் ஷாவை பாமக தலைவராக அன்புமணி சந்திக்க இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடானது அன்புமணியை தலைவர் பதவியிலிருந்தே நீக்குமளவுக்கு போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மற்ற தலைவர்களெல்லாம் தமது அரசியல் வாரிசுகளை முன்னோக்கி உயர்த்திக் கொண்டிருக்க, ராமதாஸ் தனது வாரிசை பின்னோக்கி இழுத்திருக்கிறார். இது பாமக-வுக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!