Site icon Metro People

தனியார் மருத்துவமனைகளில் கட்டண பட்டியல் வைக்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றக் கிளை

தனியார் மருத்துவமனைகளில் கட்டண பட்டியல் வைக்க உத்தரவிட முடியாது என கூறி வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், “தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுகப்பிரசவத்துக்கு ரூ.30,000 வரையும், அறுவை சிகிச்சை பிரசவத்துக்கு ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கின்றனர். பிரசவத்துக்கு பிறகு தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருக்கும் நாட்களில் அறைக்கட்டணம், பரிசோதனைக் கட்டணம் என பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவ கழக விதிப்படி ஒவ்வொரு மருத்துவமனையிலும் சிகிச்சை கட்டணம் தொடர்பாக தகவல் பலகை வைக்க வேண்டும். இந்த விதிமுறை தனியார் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுவதில்லை. எனவே, அனைத்து அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகை வைக்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கட்டணம் உடல் நல பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பொருத்து மாறுபடும். இதனால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version