Site icon Metro People

147 நாட்களில் இல்லாத அளவு கரோனா தொற்று எண்ணிக்கை சரிவு: உயிரிழப்பும் குறைவு

இந்தியாவில் கடந்த 147 நாட்களில் இல்லாத அளவு தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 28 ஆயிரமாகக் குறைந்துள்ளது, உயிரிழப்பும் 373 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 28 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 147 நாட்களில் முதல் முறையாக கரோனா தொற்று 28 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 508 ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 139 நாட்களில் முதல் முறையாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 3 லட்சத்துக்குக் கீழ் சரிந்துள்ளது. தினசரி கரோனாவில் பாதிக்கப்படுவோர் சதவீதம் 1.87 சதவீதமாகச் சரிந்துள்ளது.

கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 373 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 28 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 1.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 48 கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 845 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. திங்கள்கிழமை மட்டும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 313 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் 51.45 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Exit mobile version