Site icon Metro People

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு

 திமுக எம்.பி. ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி கடந்த2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சென்னையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் நேரில் ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகல்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ரவி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆ.ராசா தவிர்த்து மற்றவர்கள் ஆஜராகினர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ளதால் ஆ.ராசா ஆஜராகவில்லை. விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு கோரி அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version