சென்னை: வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 2.5.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து,செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி அமைந்த பின்னர்.. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் என்று அண்மையில் அமித் ஷா அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் முதன்முறையாகக் கூடுவதால் இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிருப்திகள் பற்றி ஆலோசிக்கப்படுமா? மேலும், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் சூழலிலும், பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் இந்த செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. எனவே இதில் கூட்டணி தொடர்பான மூத்த தலைவர்கலின் கருத்து, கடைநிலைட் தொண்டர்கள் மனநிலை பற்றி ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘திருப்பூர் கூட்டம் ஒரு சான்று..’ நேற்று (ஏப். 14) திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான அதிருப்திகள் வெளிப்பட்டன.
அக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, சு.குணசேகரன் பேசுகையில், “அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, இந்த கூட்டணி அமைந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் வருத்தமடைந்து வேலை செய்யமாட்டோம் என்றார்கள். முடிந்தவரை அதிமுகவுக்காக பணி செய்யுங்கள் என வலியுறுத்தினோம்.
நமக்கு இயக்கம் தான் முக்கியம். பாஜக நிற்கவில்லை. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று சொன்னோம். ஆனால் பாஜகவின் கூட்டணியை ஏற்கமாட்டோம் என முஸ்லிம்கள் பலர் கூறினர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று என்ன செய்தது? மத உணர்வுகளை தூண்டிவிட்டு, வாக்குகளை திமுக அறுவடை செய்துகொள்கிறது.” என்று பேசினார்.
அதேபோல், திருப்பூர் மாநகராட்சி 44-வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் பேசும்போது, “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இல்லையென்றால், கட்சி 4 மற்றும் 5 ஆக உடையும் சூழலில் தான், கட்சியின் பொதுச் செயலாளர் திடமான கூட்டணியை உருவாக்க முன் வந்துள்ளார்.” என்று கண்கலங்கியபடி பேசினார்.
அதிமுகவில் நிலவும் அதிருப்திகளுக்கு திருப்பூர் கூட்டம் ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. இன்னும் அடிமட்டத்தில் தொண்டர்கள் பலரும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில் வரும் மே.2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.