கடந்த 1983-ம் ஆண்டு இந்தியாவின் ஷாம்பு சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதுவரை ஷாம்பு பாட்டில்களில் பல நாட்களுக்கு பயன்படுத்தும் அளவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. கெவின்கேர் நிறுவனம் முதல் முறையாக ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் அளவில் சிறிய சாஷேகளில் ஷாம்புவை சந்தைப்படுத்தத் தொடங்கியது. இதனால் அதிக விலை கொடுத்து ஷாம்பு பாட்டில்களை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, 25 பைசாவில் ஒரு சாஷே ஷாம்பு வாங்கி பயன்படுத்தும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது.
இதுபெரிய ‘சாஷே புரட்சியாக’ இன்றளவும் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், பேடிஎம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை இணைந்து ‘ஜன் நிவேஷ்’ என்ற எஸ்ஐபி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி குறைந்தபட்சமாக, ரூ.250 முதல் முதலீடு செய்ய முடியும். இதற்கு முன்பும் சில மியூச்சுவல் பண்டுகள் எஸ்ஐபி திட்டத்தில் ரூ.100 மற்றும் ரூ.500 என்ற அளவில் முதலீடுகளை அனுமதித்தன. ஆனால் அவற்றின் செயல்பாட்டு செலவுகள் அதிகமாக இருந்ததால் அவை வெற்றி பெறவில்லை.