விழுப்புரம்: “வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர் குமரி அனந்தன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் அன்பைப் பெற்றவருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்ட சிறந்த தலைவர்களில் குமரி அனந்தனும் ஒருவர். வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.
இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்ந்தெடுக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் தமிழில் வினா எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர். அஞ்சல் துறை படிவங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராடியவர்.
என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மதுவுக்கு எதிரான போராட்டங்களில் குமரி அனந்தன் கலந்து கொண்டுள்ளார். அன்னைத் தமிழைக் காப்பதற்காக பாமக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியவர் அவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரி அனந்தன் முழுமையாக நலமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், ஆகச் சிறந்த தமிழ்ப் பற்றாளரான குமரி அனந்தனை இயற்கை நம்மிடமிருந்து பிரித்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.