‘வீர தீர சூரன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: விக்ரம் அப்டேட்

வீர தீர சூரன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விக்ரம் பதிலளித்துள்ளார்.

‘வீர தீர சூரன்’ திரைப்படம் தாமதமாக வெளியானாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை முன்வைத்து படக்குழுவினர் தமிழக திரையரங்குகளுக்கு சென்று மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அதில் மக்கள் மத்தியில் பேசும்போது, ‘வீர தீர சூரன்’ படத்தின் முதல் பாகம், 3-ம் பாகம் உருவாகும் என்று விக்ரம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விக்ரம் கூறும்போது, “அருண்குமாரின் திறமை என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தை காட்டாமல் அதைப் பற்றி அனைவரையும் பேச வைத்துள்ளார். அது மிகவும் கடினம். முதல் பாகத்தில் பின்னணி கதையும், திலீப் கதாபாத்திரமும் இருக்கும். 3-ம் பாகத்தில் வெங்கட் கதாபாத்திரம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.