Site icon Metro People

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 17-ஆம் தேதி உருவாக கூடும். தெற்கு மஹாராஷ்டிரா – கோவா கடல் பகுதிகள் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வட அந்தமான் கடல் பகுதியில் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது.

மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையக்கூடும். தமிழ்நாட்டில் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 17-ஆம் தேதி உருவாக கூடும். தெற்கு மஹாராஷ்டிரா – கோவா கடல் பகுதிகள் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று மழை பெய்யும் பகுதிகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட உள் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Exit mobile version