புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிஹாரில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் பிஹாரில் காங்கிரஸ் திடீர் தீவிரம் காட்டிவருகிறது.
காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, திங்கள்கிழமை காலை பிஹாரின் தலைநகரான பாட்னாவை அடைந்தார். கடந்த மூன்று மாதங்களில் பிஹாருக்கு அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இதுவாகும். முதலில் அவர் பிஹாரின் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பாட்னாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா நினைவு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சம்விதான் சம்மான் சம்மேளனத்திலும்’ கலந்து கொண்டார்.
பின்பு பேகுசராய் சென்றவர் அங்கு பிஹார் காங்கிரஸின் இளம் தலைவரான கன்னையா குமாரின் ‘பலயான் ரோகோ, நௌக்ரி தோ (இடம்பெயர்தலை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்)’ யாத்திரையில் இணைந்தார். இந்த யாத்திரையில் ஏராளமான காங்கிரஸார் திரண்டனர். இந்த ஆண்டு அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால், தெங்கானா உள்ளிட்ட சில இடங்களைத் தவிர பிஹாரிலும் காங்கிரஸின் நிலை இதர மாநிலங்களைப் போலவே உள்ளது. ராகுலின் வருகைக்கு முன்பாக பிஹார் காங்கிரஸில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சி அதன் மாநிலத் தலைவரையும் மாநிலப் பொறுப்பாளரையும் மாற்றியுள்ளது. தலித் சமூகத்தின் எம்எல்ஏவான ராஜேஷ் ராம் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மோகன் பிரகாஷுக்குப் பதிலாக, இளம் தலைவர் கிருஷ்ணா அலவாருவுக்கு மாநிலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிஹாரில் அதிகமுள்ள முஸ்லிம் வாக்காளர்களைக் கணக்கில் கொண்டு, ஷகீல் அகமது கானை தன் சட்டமன்றக் கட்சித் தலைவராக்கியது காங்கிரஸ்.
மாநிலத்தில் வளரும் இளைஞர்கள் எண்ணிக்கை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை தன் அரசியலாக காங்கிரஸ் முன்னெடுக்கிறது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்தவர் கன்னையா குமார்.
இவருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளது. சிபிஐ கட்சியில் இணைந்த கன்னையா, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பேகுசராயில் போட்டியிட்டு தோல்வியுற்றவர், பின்பு காங்கிரஸில் இணைந்தார். பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கன்னையா டெல்லியில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதிலும் அவர் தோல்வியடைந்தார்.என்றாலும் ராகுல் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.
இந்தப் பின்னணியில் கன்னையா இளம் தலைவராக இருப்பதும் அவர் தலித் சமூகத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஹாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியின் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. ஆர்ஜேடியுடன் இடதுசாரி கட்சிகள் மற்றும் சில சிறிய கட்சிகளும் கைகோர்த்துள்ளன. இவர்கள் இடையே மெகா கூட்டணியில் ஆர்ஜேடியின் இளைய கூட்டாளியாக ராகுல் காந்தி தொடர விரும்பவில்லை.
பிஹாரில் தனது அரசியலைத் தீவிரப்படுத்தி மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட காங்கிரஸ் முயல்கிறது. இதனால், தனது பிஹார் வருகையில் கூட்டம் காட்டி, காங்கிரஸுக்கும் ஒரு பெரிய வாக்கு வங்கி இருப்பதைக் காட்ட முயல்கிறார் ராகுல் காந்தி.
பிஹாரில் தலித் வாக்குகளை ஈர்க்க, அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீடு ஆபத்தில் இருப்பதாக காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. தலித்துகளுடன் இடஒதுக்கீட்டுடன் தொடர்புடைய சமூகங்களையும் தனக்கு ஆதரவாக அணிதிரட்டவும் காங்கிரஸ் முயல்கிறது.
இதன் பலனாக காங்கிரஸுக்கு மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் கூடுதலாக தொகுதிகள் கிடைத்தன. தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளால் காங்கிரஸ் உத்தரப் பிரதேச தொகுதிகளில் வென்றது.
இதே எதிர்பார்ப்பு பிஹாரிலும் ராகுலுக்கு உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸின் இந்த புதிய முயற்சியால் பிஹாரில் மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடிக்கு இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் பிஹாரில் ஆர்ஜேடியின் வாக்கு வங்கியில் முஸ்லிம்கள் மிகமுக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆர்ஜேடியின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள் வாக்குகளையும் காங்கிரஸ் அசைத்து பார்க்கும் சூழல் உள்ளது.
வாக்குவங்கிக்கான இந்த மோதல், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உண்மை நிலை சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும்போது தெளிவாகும்.