இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படும் நிலையில், திருச்சியில் கார்கில் வீரர் சரவணனின் நினைவுத் தூணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் கார்கில் பகுதியில் ஊடுருவினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், இந்திய வீரர்கள் 543 பேர் வீரமரணம் அடைந்தனர். போர் வெற்றி நாளான ஜூலை 26 ‘கார்கில் விஜய் திவாஸ்’ என கொண்டாடப்படுகிறது.
2 நாள் பயணமாக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் வீரர் சரவணனின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் வீர மரணம் அடைந்த வீரருக்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி சமயபுரம் அருகே புறத்தாக்குடி கிராமத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
நாளை காலை திருச்சியில் வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அப்போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை அவர் வழங்குகிறார்.