
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெறப் பலர் விரும்பும் சூழலில், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலிருந்தே செயல்பட விண்ணப்பித்திருப்பதும் அவற்றில் 50 பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க இருப்பதும் வரவேற்கத்தக்கவை. ஆண்டுதோறும் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.
வெளிநாடுகளில் பயில்வதற்காகச் செலவழிக்கப்படும் தொகையில், 60 பில்லியன் டாலர் செலவிட்டதன் மூலம் 2023இல் இந்தியா உலகளவில் முதலிடம் பிடித்தது. அமெரிக்காவில் பயிலும் இந்தியர்களில் 70-80% பேர், கல்விக் கடன்களையே சார்ந்துள்ளனர். படிப்பை முடித்த 7-10 ஆண்டுகளில் அவர்கள் கடனை அடைக்க வேண்டும்.